|
| ஜனநாயக சூழலைப் பலப்படுத்துதல் |
| Thursday, October 29, 2009 |
கருத்தரங்கு நிகழ்வு
"ஜனநாயக சூழலைப் பலப்படுத்துதல்"
தலைமை- ஏ.சி.ஜார்ஜ்
சிறப்புரை- சுகன்
31.10.2009, சனிக்கிழமை, மாலை 3:30 மணி
நாவலர் கலாசார மண்டபம், யாழ்ப்பாணம்
ஏற்பாடுகள் : யாழ் ஆய்வறிவாளர் அணியம் Labels: நிகழ்வுகள் |
posted byNICHAMAM @ 10/29/2009 11:51:00 PM  |
|
|
|
| தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 20 ஆண்டு நினைவு |
| Monday, October 12, 2009 |
காலில் வீக்கத்துடன் அந்தக் காலை லேசாக தடவிக்கொடுத்தவாறே திண்ணையில் உள்ள சாய்மனைக்கட்டிலிலிருந்து இடதுசாரிச் சிந்தனை அடிப்படைகளை கோரோசனைக் குழிசையை சிரட்டையில் உரைத்துப் பக்குவத்துடன் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நம் கிராமத்து வைத்தியர்போல அவர் அருகே இருந்து பாடம் கேட்ட 1983 கால நாட்களை இன்று நினைவுகூர்கிறேன்.

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்கள் மனைவி பிள்ளைகளுடன் 1969 இல்
இடையிடையே எழும்பி முற்றத்தில் நடக்கும் பாவனையிலும்கூட மூலதனத்தினதும் தனிச்சொத்துடமையினதும் அரசினதும் உழைப்பாளர் வர்க்கத்தினதும் இனவேறுபாடுகளைக் கடந்து ஐக்கியப்படவேண்டிய தவிர்க்கவியலாத நியதிபற்றி ஆசான் மணியத்தாரிடம் அப்போது பாடம் கேட்டதை இப்பொழுது நினைவுகூர்கிறேன்
கீறாத,கிறுக்கிக் கசக்கிவைக்காத காகிதமாக அப்போது நாங்கள் இருந்தோம். அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) பொதுச்செயலாளராக இருந்தார். அவ்வப்போதான உரையாடல்களின் வழியே இன்றுவரை என்னிடம் தொடரும் வர்க்க சாதிய போராட்ட அடிப்படைகள் அவரிடம் இருந்து முதிசமாக எனக்குக் கிடைத்தவைகளே.
தமிழில் வெளிவந்த சீன - சோவியத் இலக்கியங்களை எனக்கு கனிவோடு அளித்த ஒளியும் அறிவும் விவேகமும் நிறைந்த அந்த முகம் நினைவில் இப்போது அபூர்வமாகவும் அதிசயமாகவும் மாறிவிட்டது. நாம் மறுத்தபோதும் துப்பாக்கிகளைத் தருவதற்கு எல்லோரும் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர்.
தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் அவரின் அன்றைய நெறிப்படுத்துதல்களே இன்றுவரை வன்முறையற்ற வடிவங்களில் எம்மை நடத்திவருகிறது.
தீண்டாமை எதிர்ப்புப்போராட்டத்தின் போது தோழர் மணியம் அவர்கள் முன்னணியில் நின்று போராடியதிலும், அப்போது பொலிஸாரின் வன்முறையிலும் தடியடியிலும் தாக்கப்பட்டதிலும் தொல்புரத்தில் தலித்துகளிற்கான குடிநீர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்மாதிரியிலும் அவரின் நினைவு இன்றுவரை தொடர்கிறது.
'வெய்யிலில் இருந்தால்தான் நிழலின் அருமை தெரியும்' என்பது அவர் போன்ற பெரும் ஆளுமைகள் மறைவின்பின் இன்று வெறுமையாகவே தெரிகிறது. புலிகளால் அவர் அச்சுறுத்தப்பட்டார். எப்போதும் செயற்படாதவாறு அவர் முடக்கப்பட்டார்.
ஒரு கார்த்திகை விளக்கீட்டு நாளின்போது அவர் மகனும் எனது தோழனுமான 'மீரான் மாஸ்ரர்' அவர்களோடு கடைசியாக அவர்கள் வீட்டிற்குப்போய் அம்மாவின் கையால் கொழுக்கட்டையும் மோதகமும் சாப்பிட்டபின்னர் அவர் வீட்டிற்கு இன்றுவரை போகவில்லை.
இப்போது போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.ஆனால் மிஞ்சியிருப்பது...மணியத்தார் இருந்தால் எவ்வளவு நல்லாக இருக்கும்.
சுகன் |
posted byNICHAMAM @ 10/12/2009 03:57:00 PM  |
|
|
|
| சாதியத்தை எதிர்த்தாரா மகாத்மா? |
|
 சாதியத்தை எதிர்த்தாரா மகாத்மா?
அ. மார்க்ஸ்
இந்த ஆண்டு காந்தி பிறந்த நாள், “சத்தியாக்கிரகம்’ என்கிற போராட்ட முறையை அவர் உலகுக்குத் தந்த நூற்றாண்டில் அமைகிற வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம் முதலியன அரசுக்கு எதிராக ஒருவர் தன்னை வகுத்துக் கொண்டு அழிந்து போகிற முட்டாள்தனமான ஒரு காரியமல்ல. பரந்துபட்ட பெருந்திரளான மக்களைச் சட்டத்தை மறுக்க வைக்கிற, மீற வைக்கிற, அதன் மூலம் அரசைப் பணிய வைக்கிற போராட்ட வடிவம் அது.
சட்டம் மீறுகிற போராட்ட வடிவங்கள் என்பன ஆயுதம் தாங்கிய சிறு முன்னணிப் படையால் நடத்தப்படுவன என்கிற நிலையை மாற்றியமைத்தவர் அவர். மக்களின் மீது அதிகாரமுள்ள முன்னணிப்படை (Vanguard ) என்கிற கருத்தாக்கம் இதன் மூலம் அழிந்தது. அனைவரும் அதில் படைவீரர்கள். துயரைத் தாங்குதல், அதே நேரத்தில் அதிகாரத்தை எதிர்த்தல் என்பதே காந்தியடிகளின் கொள்கை.
காந்தியின் தென் ஆப்பிரிக்க வாழ்க்கை (1893 – 1914) நிறவெறித் தீண்டாமைக்கெதிரான போராட்டக் களமாக மட்டுமன்றி சுயநலமற்ற நேர்மையான அரசியலுக்கான சோதனைக் களமாகவும் இருந்தது. அங்கு அவர் உருவாக்கிய ஃபீனிக்ஸ் பண்ணை மற்றும் டால்ஸ்டாய் பண்ணைகள் என்பன மார்க்ஸியர்கள் கனவு கண்ட ஒரு “கம்யூன்’ வடிவத்தின் மிகச் சிறந்த மாதிரியாக இருந்தது. பண்ணையிலுள்ள அனைவரும் தமது வருமானங்களைப் பொதுவாக்கி, கூடி உழைத்துப் பகிர்ந்து கொள்ளுதல் அங்கே கடமையாக்கப்பட்டன. தனது பெரும் வருமானம் அனைத்தையும் அவர் பண்ணையில் பகிர்ந்து கொண்டார்.
இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தில் அவருக்கு நேரடியான பங்கில்லை என்றபோதிலும் இது ஒரு “மதச்சார்பற்ற குடியரசாகப்’ பிரகடனப்படுத்தப்பட்டதில் காந்தியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. “மதச் சார்பின்மை’ (Secularism) என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஓர் அரசியல் சொல்லாடலாக மாற்றியமைத்ததில் காந்தியின் பங்கை இன்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெண் விடுதலை குறித்துச் சனாதனமான கருத்துகளைப் பேசியதாகவே நாம் அவரை அறிந்து வந்துள்ளோம். ஆனால் பெண்களைக் குடும்பத்திற்குள் சிறைப்படுத்தாமல் ஆசிரம வாழ்விற்கும், அரசியல் களத்திற்கும் ஈர்த்தவர் அவர். அவரளவிற்குப் பெண்களைப் போராட்டக் களத்தில் இறக்கியவர்கள் யாருமில்லை. உப்புச் சத்தியாக்கிரகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
காந்தியை விமர்சிப்பவர்களில் பலர் அவரை முழுமையாக வாசித்ததில்லை. எனவே அவர் குறித்த தவறான புரிதல்கள் பல இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று,
“அவர் தீண்டாமையை எதிர்த்தபோதும் சாதியத்தை எதிர்க்கவில்லை; வருணாசிரமத்தை ஆதரித்தார்”
என்பது. இன்று உலகெங்கிலும் காந்தி மறுவாசிப்பிற்குள்ளாகிக் கொண்டுள்ளார். இத்தகைய மறுவாசிப்பாளர்களில் ஒருவரான அனில் நவுரியா கருத்தை ஆதாரபூர்வமாக மறுக்கிறார்.
1927-ல் சிங்களவர்கள் மத்தியில் பேசும்போது, “”மகிந்தரையும் பவுத்தத்தையும் உங்களுக்குத் தந்ததற்காக இந்தியா பெருமைப்படும் அதே நேரத்தில் சாதி வேறுபாடு எனும் சாபத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக அது வெட்கப்படுகிறது” என்றார். சாதியை “”முன்னேற்றத்திற்குத் தடையானது” எனவும் “”சமூகக் கொடுமை”, “”காலத்திற்கு ஒவ்வாதது”, “”ஒழிக்கப்பட வேண்டியது” என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.
தொடக்க காலங்களில் அவர் வருணாசிரமத்தை ஆதரித்துக் கருத்துகள் கூறிய போது கூட தனது ஆசிரமங்களில் “வருணவியவஸ்தா’விற்கு இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். “”தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூடச் சிந்த மாட்டேன்” என்றார் (1927). வருண முறையை ஆதரித்தபோதும்கூட அவர் பிறவியால் வருணமும், தொழிலும் தீர்மானிக்கப்படுதல் என்பதை ஏற்கவில்லை.
மதங்களில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்கிற கருத்து சாத்தியமில்லை என்றார். தலித்களுக்கும் மற்றவர்களுக்குமான திருமண உறவை வலியுறுத்தினார். “”இறுதியில் ஒரே சாதிதான் இருக்க வேண்டும். “பங்கி’ (துப்புரவாளர்) என்கிற அழகிய பெயருக்குரியது அது. அதாவது எல்லா அழுக்குகளையும் நீக்கிச் சீர்திருத்துபவர். அந்நிலை விரைவில் வர வேண்டுமென நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம்” என்றார் (1946).
சுதந்திர நாள் நெருங்கிய போது பிரார்த்தனைக் கூட்டமொன்றில் (ஜூன் 1, 1947) “”பங்கிகளின் ஆட்சி” இங்கே உருவாக வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமைக்குள்ளானவர்களிலும் ஆகக் கீழாக ஒதுக்கப்பட்டவர்களின் மீது அவரது கரிசனம் கூடுதலாக இருந்ததையே இது வெளிப்படுத்துகிறது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசும்போது (ஜூன் 14, 1947) சுதந்திர இந்தியாவில் சவர்ண ல அவர்ண வேற்றுமை ஒழிய வேண்டும் என்றார். சூத்திரர், தீண்டத்தகாதோர், ஆதிவாசிகள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றார். மற்றொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் (ஜூன் 2, 1947) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஒரு “”தலித் பெண்ணாக” இருக்க வேண்டும் என்றார்.
“தலித்’ என்கிற சொல்லையும் காந்தி 1927, 1931ம் ஆண்டுகளிலேயே பயன்படுத்தினார் என்பது நம்மை வியக்க வைக்கும் ஒரு செய்தி. “தலித்’ என்னும் சொல் “மிகச் சரியாகவே’ பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய காந்தி, ஏனெனில் அம் மக்கள் (தானாக) “”அழுந்தியவர்கள்”(depressed) அல்ல; மாறாக “”அழுத்தப்பட்டவர்கள்” (Suppressed) என விளக்கமும் அளித்தார். எனினும் இத்தகைய சொற்கள் சுட்டும் சமூக நிலை ஒழிக்கப்பட்டு, இத்தகைய சொற்களே தேவையற்றதாகிவிட வேண்டும் எனவும் அவர் சொல்லத் தயங்கவில்லை (பார்க்க: தொகுப்பு 33, பக். 196 மற்றும் தொகுப்பு 46, பக். 342).
“”வருணாசிரமத்தை நம்புபவர்களாயினும் தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கக் கூடியவர்களையும் இணைத்து ஒரு கூட்டுப் போராட்டமாக” நடத்த நேர்ந்த அவசியத்தை அவர் விளக்கியுள்ளார் (1933). “”இப்போதைக்கு தீண்டாமை ஒழிப்போடு இது வரையறைப்படுத்தப்பட்டாலும், இறுதியில் வருணாசிரமம் தொடர்ந்து அவலட்சணமாகத் தோன்றினால் மொத்தமுள்ள இந்தச் சமூகமும் சேர்ந்து அதையும் எதிர்க்கும்” என்றார்.
காந்தியின் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் வருணாசிரம ஆதரவாளர்களிடமிருந்து உருவாகியது (1933-34). பிஹாரில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது கற்கள் வீசப்பட்டன. காசியில் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. பூனாவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் பலர் காயமடைந்தனர். தமிழகத்தில் காந்தியை வசைபாடி “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்‘ முதலிய நூற்கள் வெளியிடப்பட்டன (1932).
காந்தி கொல்லப்பட்டதற்கான காரணம் அவர் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தது மட்டுமன்றி, தீண்டாமை, சாதி வேறுபாடு, வருணாசிரமம் ஆகியவற்றிற்கு எதிராக இருந்ததும் ஒரு காரணம் என இன்றைய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சாதி, வருணப் பிரச்சினையில் அவர் தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டவராகவே காட்சியளிக்கிறார். “”நான் ஒரு கருத்தை ஏற்பது என்பது ஒன்று. சமூகத்திலுள்ள எல்லோரையும் அக் கருத்தை ஏற்பவர்களாகச் செய்வது என்பது வேறு. என் மனம் தொடர்ந்து முன்னோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். எல்லோரும் அதே வேகத்தில் என்னைப் பின்பற்றுவார்கள் எனச் சொல்ல இயலாது. எனவே நான் அதிகபட்சப் பொறுமையைக் கடைப்பிடித்து மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது” என்கிற அவரது தன்னிலை விளக்கம் குறிப்பிடத்தக்கது (1946).
மகாத்மா காந்தியின் இந்த முற்போக்கான நகர்வுக்கு அவரது சொந்த அரசியலனுபவங்கள் மட்டுமன்றி சம காலச் சிந்தனையாளர்களான அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா ஆகியோருடன் அவர் மேற்கொண்ட உரையாடல்களும், விவாதங்களும் ஒரு பங்கு வகித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. |
posted byNICHAMAM @ 10/12/2009 09:24:00 AM  |
|
|
|
| 1966 ஒக்ரோபர் 21ம் திகதி எழுச்சியை நினைவுகூரும் கருத்தரங்கு |
| Thursday, October 8, 2009 |
சாதி ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக வடபகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் 1966 ஒக்ரோபர் 21ம் திகதி நடாத்திய எழுச்சியை நினைவுகூரும் கருத்தரங்கு
தலைப்பு: “யாழ்ப்பாண தமிழர் சமூகத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம்”
காலம்: ஒக்ரோபர் 11, 2009 ஞாயிற்றுக்கிழமை நேரம்: பிற்பகல் 2.30 – 6.00 மணிவரை இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre- Toronto) (எல்ஸ்மெயர் – மக்கோவன்)
இக்கருத்தரங்கில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாகப் பங்குபற்றிய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவர். சமூக சமத்துவத்தில் அக்கறையுள்ள அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்
தொடர்புகளுக்கு: democracyalt@yahoo.com |
posted byNICHAMAM @ 10/08/2009 03:59:00 AM  |
|
|
|
|
|