நிச்சாமம்

 
நிச்சாமம்-வாசகமூலை

English Pages
  • World Socialist Web Site
  • GROUNDVIEWS
  • JDS-LANKA
  • VIKALPA
  • FEDERALIDEA
  • TRANSCURRENTS
  • SAHASAMVADA
  • VOICES OF RECONCILIATION
  • HUMAN RIGHTS WATCH
  • உங்கள் பக்கங்களில் இணைக்க கீழ் உள்ள நிரலியைப் பிரதிசெய்து ஒட்டுக!

    Nichchamam



    ஏற்கனவே
    சொல்லப்பட்டவை
    வடிவமைப்பு

    BLOGGER

    சுட்டிகள்
    வருகைக்கு நன்றி
    எதிர்வழிபாட்டின் அடையாளங்கள்
    Monday, January 23, 2012
    மக்கள் வரலாறே மகத்தானது
    --சு.வெங்கடேசன்--

    [மனித ஆளுமைகள் வடிவமைக்கப்படுகின்றன. புறச்சூழலுக்கு வடிவமைப்பதில் பங்குண்டு என்பதை அறிவோம் நாம். இளங்குமரனாரின் வகுப்பறை மாணவர். பள்ளிக்கூட பேச்சுப் போட்டிகளில் சான்றிதழ் பெற்றுத் திரும்பும் போது பெருமிதப்பட்டவர். வணிகவியல் பாடத்தைக் கல்லூரியில் படிக்க நேர்ந்த போதும் கவிதைகளின் பால் நேசம் கொண்ட இளங்கவி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இலக்கிய இரவு மேடைகளின் ஆற்றல் மிக்க பேச்சாளர். தமிழ்மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு வெளிகளில் கவனம் பெற்றிட்ட ஆய்வு நூல்களின் படைப்பாளி. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர். கட்சிப் பணிக்காக களத்தில் நிகழ்த்திய பயணத்தில் கிடைத்திட்ட தரவுகளும், ஆவணங்களும், கதைகளுமே அவரின் காவல் கோட்டமாக உருவானது. தீராத அலைச்சலில் விளைந்த புனைவிலக்கியத்திற்கு சொந்தக்காரர் ஆன சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தமைக்காக செம்மலர் அவரைப் பாராட்டுகிறது. அவரோடு நிகழ்த்தப்பட்ட உரையாடலை இனி வாசகர்கள் பின் தொடர்வீர்களாக.]


    எழுத வந்த முதல் தலைமுறை எழுத்தாளர் நீங்கள். உங்களின் குடும்பப் பின்புலம் பற்றி. . .

    என்னுடைய தந்தை திராவிட இயக்க ஈடுபாடு கொண்டவர். எங்கள் வீட்டில் கல்கியும், சாண்டிலியனும் நடமாடித் திரிவார்கள். ஆனாலும் என்னை வடிவமைத்தவர்கள் நேர் எதிர் முரண் பண்பு கொண்ட இரண்டு பாட்டிகளே. ஒருவர் வைஷ்ணவப் பின்புலம் கொண்டவர் என்றால் மற்றவர் கணவனை இழந்து நான்கு பெண் பிள்ளைகளை வளர்த்திட சமூகச் சிக்கல்களோடு மல்லுக்கு நின்றவர். இருவரும் என்னுள் இரு வேறு விதமாக ஊடாடினார்கள். விபீஷணனும், விராடனும் எங்கள் வீட்டின் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடப்பார்கள். அவனையும் இன்னபிற இராமாயண, மகாபாரதக் கதைகளை தன் குரல்வழியே எங்களின் நிலமெங்கும் நிறைப்பாள் பாட்டி.
    அவள் பெருமாள் முத்திரைப் பாணம் பெற்றவள். அவளின் அண்ணன் கைங்கர்ய பரல் பெற்றவர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அவரைச் சந்திக்க அவளுடன் பயணம் செய்திருக்கிறேன். யாவரும் விடைபெற்று வெளியேறிய பிறதான கோயில் நடையில் கேட்கும் குரல்களும், கும்பிடும் சிலைகளின் காலடியில் எப்படித் தூங்குகிறார்களோ என்கிற பயமும் இன்றும் என்னுள் உறைந்து கிடக்கிறது. இன்னொரு பாட்டி தனித்திருந்து விவசாயம் செய்து வளர்த்தவள். அவளுடைய ஆண்கள், கடவுள்கள் பற்றிய கருத்தாடல்கள் எனக்குள் பேராக முளைவிட்டிருக்கின்றன. என்னுடைய பால்யத்தின் பொக்கிஷங்கள் இவ்விரு பாட்டிகளும் இரு வேறு கதை உலகமும் எனக்குள் ஊறிக் கிடக்கிறது.

    உங்களை இலக்கியத்தின் பக்கம் ஈர்த்த புறச் சூழல் என்னவாக இருந்தது?

    நான் இளங்குமரனாரின் மாணவன். அவரின் ஏதோ ஒரு குரல் எனக்குள் விழுந்திருக்கிறது. அதுவே என்னை இலக்கியத்தின் பால் ஈர்த்திருக்கும் என்று நினைக்கிறேன். பால்யத்தில் நான் +1 பெயில் ஆனேன். இந்தத் தோல்வி என்னை வேறு ஒருவனாக்கியது. என்னுடைய இடம் எதுவென அங்கிங்கு அலைந்தேன். அந்த அலைச்சலே என்னை கவிதைக்குள் நிறுத்தியது. துவக்க கால இளைஞர்கள் எழுதுவதற்கான கடவுச் சீட்டாக கவிதையைக் கைக் கொள்வதைப் போலவே நானும் கவிதை எழுதினேன். கவிஞர் மீரா, மேத்தா, வைரமுத்து போன்றோரின் கவிதைகள் என்னைக் கல்லூரி நாட்களில் கவர்ந்தது. மீராவின் செல்லப்பிள்ளைகளில் நானும் ஒருவன். என் முதல் தொகுப்பிற்கு அவர்தான் முன்னுரை எழுதி வெளியிட்டார். அவருடைய கைகளின் ஸ்பரிசத்தை என் தோள் மீது உணர்ந்த கணம் நின்று விட்ட கடிகாரம் போல நினைவிற்குள் அப்படியே இருக்கிறது. நான் +2 விடுமுறையில் ஒரு நாவல் எழுதினேன். கலைமகள் நடத்திய போட்டிக்காக "உயிருக்கு ஒரு உயில்" என்ற நாவலை அனுப்பி வைத்தேன்,அது 1989ல். அதன் பிறகு நான் கதைகள் எதுவும் எழுதுவில்லை. "காவல் கோட்டம்" தான் என்னுடைய வெளிவந்த முதல் புனை கதை.

    கலாச்சாரப் பணிக்காக, அரசியல் பணிக்காக பயணித்துக் கிடப்பவராக இருக்கிறீர்கள். படைப்பாளியின் செயல்பாட்டை உருவாக்குவதில் பயணங்களுக்கு பங்குண்டு. உங்களின் பயணங்கள் படைப்பை பாதித்ததுண்டா? நேர்மறையாகவோ? அல்லது எதிர்மறையாகவோ?

    என்னுடைய மதுரை-சிவகெங்கை-தேனி-திண்டுக்கல் மாவட்டங்களில் நான் நிகழ்த்திய உட்கடைக் கிராமப் பயணம் எனக்கு மிகப் பெரும் இலக்கியச் செல்வத்தை அளித்திருக்கிறது. தார்ச்சாலைப் பயணங்கள் என்னை ஈர்த்ததில்லை. ஒத்தையடிப் பாதையைத் தொலைத்த மதுரை மாவட்டத்தின் கடைசிக் காரியம் வரை நான் பயணித்திருக்கிறேன். அந்தக் கிராமத்தில் ஒரு தோழனிடம் "என்னங்க உங்க ஊருக்கு ரோடே இல்ல" எனக் கேட்டபோது அட என்னய்யா கண்ணு தெரியாதவனுக்குத் தான் ரோடு வேணும் நமக்குத் தான் கண்ணு தெரியும்ல என்றார்.

    கவிஞரான உங்களை சமூக ஆய்வாளராக பயணங்கள் உருமாற்றியது போல தெரிகிறது. தரவுகளைத் திரட்டிடத் திட்டமிட்டு பயணம் செய்வீர்களா?

    திட்டமிட்ட பயணங்கள் என்றால் அது அரசு ஆவணக்காப்பகங்களை நோக்கிய பயணங்கள் மட்டும் தான். பயணங்களே அசாத்தியமானவை, "இந்த ஊர்ல எத்தனை எத்தனை இடத்தில் பேய் இருக்குன்னா முதல்ல சிரிப்பாங்க. அப்புறம் எத்தன பேய், எந்த எந்த இடம். அதோட பவர் என்ன எல்லாத்தையும் கதை, கதையாக சொல்லத் துவங்கி விடுவார்கள். ஊரின் கதைகள் குறிப்புகளாக பயணத்தின் ஊடாக கிடைக்கிறது. இந்த முதல் புள்ளியை விரித்துச் செல்ல வரலாற்றைப் புரட்டுகிறோம், எழுதப்பட்ட புத்தகங்கள் தூரத்தில் ஒதுங்கி நின்றுதான் உள்ளே எட்டிப் பார்க்கின்றன.

    கிடைத்த தரவுகளை நீங்கள் ஏன் புனைவாக்க உருமாற்றினீர்கள். ஒரு ஆய்வு நூலகத்தானே மாற்றிடச் சாத்தியம். எந்தப் பள்ளியில் இவை யாவற்றையும் ஒரு புனைவாகத்தான் எழுதிட வேண்டும் எனும் மனநிலைக்கு வந்தீர்கள்.

    நாவல் என்கிற வடிவத்தின் மீது எனக்கிருந்த மரியாதையும், நம்பிக்கையும் தான். வாழ்வின் முழுமையை நாவலில் தான் வெளிப்படுத்திட முடியும் என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து. ஐந்து, ஆறு வருடங்கள் என் முன்பிருந்த எல்லா மகத்தான நாவல்களையும் கற்றேன். முதன் மூன்று வருடங்கள் தரவுகளை திரட்டுகிற போது இருந்த சின்ன சின்ன குழப்பங்கள் யாவும் வடிந்தது. மகத்தான மனிதர்கள் வாழ்கிற இந்த உலகை நாவலாகத்தான் எழுதிட வேண்டும் என்று முடிவு செய்தேன். நாவல் என முடிவு செய்தபிறகு எட்டு தலைமுறை குறித்த வரைபடம் உருவாக்கினேன். கிராமக் காவலைப் பற்றி முழுமையாக எழுதுவது தான் என் திட்டமாக இருந்தது.

    கிடைத்த தரவுகளை வாய்மொழி வழக்காறுகளை நாவலாக்கிட வேண்டியது தான் என்று உங்களை நிர்பந்தித்த அந்தத் தருணத்தைப் பற்றி கேட்கிறேன்.

    ஒரு மரணத்திற்கு மாலை வைக்கப் போயிருந்தேன். நான் கள ஆய்விற்குப் போய் வருகிற ஊர். மாலை அணிவித்த போது சொல்கிறார்கள் இவருக்கு வயது 104. அந்தமான் சிறைச்சாலைக்கெல்லாம் போய் வந்தவர் என்று. ஊகூ ஹஉவல் போடப்பட்டு, அவர் சுதந்தரம் கிடைத்த பிறகு அந்தமான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் இவருடைய பெயரோ செயல்பாடோ சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றின் பக்கங்களில் இல்லை. மறைக்கப்பட்ட வரலாறு என்பது கண்டறியப்பட வேண்டிய வரலாறே என்று என்னை நிலைகுலையச் செய்த சம்பவம். என் உள்ளங்கைக்குள் வந்த வரலாற்றை தவறவிட்டு விட்டோமோ என்கிற பெரும் குற்ற உணர்ச்சி எனக்கு இன்று இருக்கிறது. இந்த கிழவன் தானே நம்முடைய காவிய நாயகனாக இருந்திருப்பான் என மரணத்தில் பிறந்தது எனக்கொரு ஞானம். இவர் நடத்தியது என்ன ஒரு முறைமைக்கு எதிரான போராட்டம் தானே.

    மற்றொரு சம்பவம் ஒரு எஸ்.பி.யோட கடிதம். 1786ல் மதுரை மாவட்ட எஸ்.பி. கவர்னருக்கு எழுதிய கடிதம். "காவல் சமூகம் முழுக்க அழிஞ்சிருச்சா" இதுவே கேள்வி. "நான் வேலைக்கு சேர்ந்த நாளில் வந்த உள்ளூர் காவல்காரன் என்னிடம் காவல் கூலி கேட்டான். நான் குடுக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் உடனே சொன்னார்கள் தராவிட்டால் போலீஸ் ஸ்டேஷனே காணாமப் போயிடும் என்றார்கள். வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். நான் அவனுக்கு காவல் கூலி தந்தேன்" இதுவே எஸ்.பி.யின் பதில். இதற்கு 100 வருடத்திற்கு முன்பு வரி கொடுக்க மாட்டேன் என்று சொன்னதற்காக கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டிருக்கிறான். ஆனால் சர்வ அதிகாரம் பொருந்தி பிரிட்டீஷ் சர்க்காரே உள்ளூர் காவல்காரனுக்கு காவல் கூலி கொடுத்திருக்கான். அப்ப இது என்ன வரலாற்று விசித்திரம். மன்னர்கள் எதிர்த்திருக்கிறார்கள். பாளையங்கள் வரி கொடுக்க மறுத்திருக்கின்றன. ஆனா மக்கள் காவல் கூலி வாங்கியிருக்கிறார்கள். எவ்வளவு வலிமையானது காவல் முறைமை. இதை எப்படி நான் non fiction ஆக எழுத முடியும். யார் இந்த காவல்காரன், எந்த ஊரு. எப்படி வாழ்ந்தார்கள் என நான் அவனை கதைகளின் ஊடாகப் பின் தொடர்ந்தேன். அதுவே காவல் கோட்டம்.

    வரலாற்றெழுதியலுக்கு தரவுகளும், தகவல்களும், ஆவணங்களும் மட்டுமே போதுமானது. ஆனால் வரலாற்றுப் புனைவாக்கத்தை இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நிகழ்த்திட இயலுமா? வரலாற்றாசிரியனையும் தாண்டிய கடும் மன உழைப்பு தேவைப்படுமே?

    வரலாற்றில் ஒற்றை வரி தான் இருக்கிறது. குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்தான் எனும் வரி மட்டுமே வரலாற்றின் பக்கத்தில் இருக்கிறது. அந்தப் போதை நாவலுக்குள் நிகழ்த்த வேண்டிய பெரும் அவஸ்தையான பொறுப்பு எழுத்தாளனின் கைகளுக்குள் வந்து விடுகிறது. அகழி எப்படி அழிக்கப்பட்டது. நெடுங்கதவு எப்படி அகற்றப்பட்டது, கோட்டை எப்படி இடிக்கப்பட்டது என கண்டறிய கல் ஒட்டர்களையும் அவர்களின் தொல்கதைகளையும் தேடிக் கண்டடைய வேண்டும். தாசரி குலப்பாடல்களை கண்டடையும் போது தான் ஒரு பெரும் போரை நிகழ்த்துவதற்கான சூட்சுமம் பிடிபடுகிறது. வரலாற்றுப் புனைகதையாளனுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. அவன் திரட்டுவது ஆவணங்களின் வரலாற்றையல்ல. மக்களின் வரலாற்றை. வரலாறு - வரலாற்றெழுதியல் - வரலாற்றுப் புணைவாக்கம் எனும் மூன்றும் எழுத்தாளனுக்கு புரிய வேண்டியதிருக்கிறது.

    காவல் கோட்டத்தின் முதல் பகுதியான முடி அரசு முழுக்க ஆவணங்கள் அடுக்கப்பட பகுதி போல தென்படுகிறதே. அதனுள் எழுத்தாளன் புனைவாக்கித் தர வேண்டிய பரப்புகள் போதாமையுடன் வெளிப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே இவை பற்றி?

    மதுரையின் காவல் எல்லை, காவல் நிலை என்கிற புள்ளியிலிருந்து முன்பின் பயணிப்பது தான் காவல் கோட்டம். இதற்குள் பல மன்னர்களை, அரசர்களை எழுதிச் செல்ல வேண்டியிருந்தது. ஒற்றை வரியில் பல வருடங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. செறிவான வார்த்தைகளைக் கொண்டு சவாலாக காவல் கோட்டத்தின் முதல் அத்தியாயத்தை எழுதியிருக்கிறேன். காவல் கோட்டத்தின் வரலாறு 600 வருட மதுரையின் வரலாறு என பொதுவாகச் சொன்னாலும், 550 வருடத்தை 200 பக்கங்களும். மீதம் உள்ள 50 வருடங்களை 800 பக்கங்களும் விவரிக்கின்றன. ஒரு எழுத்தாளனின் உழைப்பை ஈவு இரக்கமில்லாமல் கோருகிறது. அப்பெரும் உழைப்பைச் செலுத்தி, அக்காலத்திற்குள் நீங்கள் பித்தாகிக் கிடந்தால் மட்டுமே அவ்வுலகை சொற்களால் கட்ட முடியும்.

    ஒரு வாக்கியத்திற்குள் மூன்று தலைமுறைகளை கடக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த ஒற்றை வரிக்குள் இருந்து அக்காதா பாத்திரங்களை தப்பவிட்டால் அவர்கள் காவல் கோட்டத்தை இதே அளவு மூன்று பாகமாக உருமாற்றி விடுவார்கள். எனவே சிலவரிக்குள் அடக்க வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் உச்சமான சவால்களைச் சந்தித்த பகுதி என அதனைச் சொல்லுவேன்.

    முடி அரசன் பகுதிகளில் முகிழ்த்து வருகிற நாயக்கர் வரலாற்றை எழுதுவதற்கு உங்கள் முன் இருந்த ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றாதாரங்கள் எவை? அவற்றை எப்படி எங்கு கண்டடைந்தீர்கள். . .?

    தமிழில் 1963ல் அ.கி.பரந்தாமனார் நாயக்கர் வரலாறு எனும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் இருபதுகளில் சத்தியநாதய்யர் எழுதிய "ஹிஸ்டரி ஆப் மதுரை நாயக் " எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புத்தகம் மதுரைக் கண்ட்ரி மேனுவள்ல (country manual) ஆதாரமாகக் கொண்டது மெகன்ரி எனும் வெள்ளையன் பாளையப்பட்டுகளின் வம்சவழி வரலாற்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறான். இது முழுக்க பாளையங்களின் குலப்பாடல்களான வாய்மொழி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. சமூக வரலாற்றுப் புரிதல் இல்லாமல் எந்த வரலாற்றுப் புணைவையும் எழுத முடியாது. வரலாற்றின் எழுதப்படாத பக்கங்களை புணைவால் இட்டு நிரப்பி புதியதொரு வரலாற்றையும் காவல் கோட்டத்திற்குள் உருவாக்கியுள்ளேன். நாவலின் முற்பகுதி வரலாற்றின் மீது கட்டப்பட்ட புனைவாகவும், பிற்பகுதி புனைவின் மீது கட்டப்பட்ட வரலாறாகவும், உருபெற்றிருக்கிறது. மானுடவியல், சமூகவியல், வரலாற்றியல் பார்வையில் காவல் கோட்டம் மதுரையின் வரலாற்றிற்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.

    நாவலுக்குள் எப்போதும் பல திறப்புகள் உறைந்திருக்கும். எப்படி ஒரு தேர்ந்த நாவல் ஒரு போதும் முடிவற்றதோ அதைப் போலவே பல்வேறு துவக்கப்புள்ளிகளைக் கொண்டது தான். உண்மையிலேயே காவல் கோட்டத்தின் துவக்கப்புள்ளி நாவலுக்குள் எது?

    சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும் நாவலின் நான் முதன் முதலில் எழுதியது கடைசி அத்தியாயத்தைத் தான் அங்கிருந்தே நான் முன் நோக்கிப் பயணித்தேன். வேர் அது அதிலிருந்து தான் விழுதுகளையும், கிளைகளையும் பரப்பினேன். ஊடிஅயீரடளடிசல ளுநவவடநஅநவே ஏன்? அங்கிருந்தவர் யார்? கீழக்குயில்குடிகாரர்களை ஏன் அங்கு தூக்கிப் போட்டார்கள். இப்படியான கேள்விகளே என்னை மதுரா விஜயத்தை நோக்கி நகர்த்தியது. நான் கடைசியாக எழுதிய பகுதியே நாவலின் முதல் அத்தியாயம். என் மனதிற்குள் நாவல் வளர்ந்த விதம் வேரிலிருந்து மரத்தின் உச்சிக்குப் போனது தான். நிஜத்தில் துவக்கப்புள்ளி சடைச்சி கர்ப்பமான நொடியில் துவங்கியது. கருப்பு காவல்ல களவு போகக் கூடாது என்கிற குரலில் இருந்து கிளம்பிப் பயணிக்கிறது. ஏராளமான நுண் தகவல்களால் பொழியப்பட்டதே இந்த நாவல். நாவல் சொல்கிற விஷயம் என்ன. ஆயிரம் செப்பேடுகளும், புதை படிவங்களும் சொல்லச் சாத்தியமற்ற வரலாற்றை மக்கள் வரலாறு திறக்கிறது என்பது தான்.

    காவல் கோட்டம் நாவல் புறவயமாகத் தான் செயல்படுகிறது. மன நிலைகளைக் கண்டு சொல்ல அகமன உணர்வுகளுக்குள் ஊடாட நாவல் தவறியிருப்பதாக எழுந்த விமர்சனம் குறித்து.

    அகத்தைத் தீர்மானிப்பதில் புறத்தின் பங்கையும், புறத்தை தன்மயமாக்க நிகழும் அகமனதின் போராட்டத்தையும் வெகு நுட்பமாக பேசியுள்ளேன். என்னைப் பொறுத்த வரை நாவல் முழுக்க அக மனதின் பாய்ச்சலாகத் தான் வெளிப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். புறத்தில் ஓராயிரம் வரலாற்றின் பக்கங்கள் புரண்ட போதும், அகமனதின் பாய்ச்சலைக் கண்டறிந்து சொல்பவனே கலைஞன். கங்காதேவி அமண மலையில் நின்றபடி "ஆயிரம் ஆண்டு நீடித்திருந்த தவம்" என்றா சொல்லியிருப்பாள். நாவல் முழுக்க அன்பும், கண்ணீரும் பொங்கிப் பெருகிறது. அதிகாரத்தை மீட்பதற்கான சூழ்ச்சி இவை யாவும் மனங்களுக்குள் தானே சூல் கொள்கிறது.

    களவும், காவலும் தாதனூரின் வாழ்வியல் முறையாக இருக்கிறது. ராஜகளவிற்கு தரப்பட்டது மதுரைக் குடிக்காவல் உரிமை என நாவல் பதிவு செய்கிறது. ஆனாலும் திருமலை நாயக்கன் காலத்திற்கு முன்பிருந்தே காவல் உரிமை கள்ளர் நாட்டிற்கு இருந்திருக்கிறது என்பதையும் நாவல் உணர்த்துகிறது. எப்படி வந்தது காவல் உரிமை? என்றிலிருந்து துவங்கியது?


    தமிழ்ச் சமூகத்தின் மரபின் பகுதியிது. சிறந்த களவாணிய காவல்காரனாப் போடு என்பதை பலரைக் காவலுக்குப் போட்டுத் தோற்றுப் போனவன் கண்டறிந்த உண்மை. 2500 வருடத்திற்கு முன்பு மதுரைக் காஞ்சியில் சொல்லப்பட்டு உள்ளது. மதுரை நகரத்தை முதல் ஜாமம், இரண்டாம் ஜாமம், மூன்றாம் ஜாமங்களில் எப்படி காவல் காக்குகிறார்கள். இது 1950 வரை பொருந்திப் போகிறது. சங்க காலப் புலவன் மாங்குடி மருதனார் காவல்காரன் கறவட சாஸ்திரத்தைக் கற்றவன் என்றுரைக்கிறார். இது வேறும் ஒன்றுமல்ல களவின் பல்வேறு நுட்பங்களை கற்றறிந்தவன் காவலையும் பேசுகிறது. மதுரையின் வரலாற்றை களவையும் காவலையும் தவிர்த்து விட்டு எவரும் பேசிட முடியாது.

    களவினை வியந்து வியந்து எழுதியிருப்பதாக வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகள் பற்றி,., , ,


    களவைப் பற்றி நவீன இலக்கியம் மிகக்குறைவாகத்தான் பதிவு செய்துள்ளது. தமிழின் இரண்டாவது நாவலான ராஜாம்பாள் சரித்திரத்தில் துவங்கி இன்று வரையிலும் களவு தரப்பட்டவனின் பார்வையில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. களவிற்குச் சென்று திரும்பியவனின் மனநிலையின்றி காவல் கோட்டம் பதிவுறுத்துகிறது. இதுவும் கூட கதை கேட்டவனின் குரல் தான். களவிற்குப் போய் வந்தவன் எழுதியிருந்தால் இன்னும் அசாத்தியமாக வெளிப்பட்டிருக்கக்கூடும். நான் எழுதாமல் விட்ட பகுதிகள் இன்னும் என் கைவசம் எழுதியதைப் போல ஐந்து மடங்கிருக்கிறது. என் நோக்கம் களவைப் பற்றியதல்ல. இந்த மக்களை களவோடு மட்டும் தொடர்புறுத்துவதைப் போல நான் செய்திட முடியாது. இவர்களை காவலின் மக்கள் என நிறுவிடவே முயற்சித்துள்ளேன். காலனியின் சூழ்ச்சியை கட்டுடைத்துப் போட்டிருக்கிறேன்.

    நாவலுக்குள் தாதுவருஷப் பஞ்சம் குறித்த சித்தரிப்புகள் மிக முக்கியமானது. பஞ்சத்தை நல்லதங்காளுடன் மட்டுமே அடையாளம் படுத்தியிருந்த தமிழ்ச் சமூகத்திற்கு தாசி குஞ்சரத்தம்மாள் காவல் கோட்டத்தின் ஒரு பெரும் கொடை தான் இது எப்படி நிகழ்ந்தது?

    ஒரு நிலத்தின் அழிவை துடியுடன் எழுதுவது என்பது ஒரு படைப்பாளிக்கு ஆகப் பெரிய சவால் தான். ஒரு நவம்பர் மாத மழை நாளில் கண்மாய்க் கரையில் நிற்கிற கூரை வீட்டில் இருந்து கேட்ட ஒரு முதுகிழவியின் குரலே நாவலுக்குள் தாது வருஷம் குறித்த சித்திரத்தை வடித்தது. நான் கட்சிப் பணிக்காக சென்றவன், கரை ஒதுங்கி நின்ற என் செவிக்குள் அவளின் குரல் இறங்கிக் கொண்டேயிருந்தது. குழந்தைகளை நல்லதங்காள் கிணற்றில் வீசுகிற நொடியை அழுது கொட்டித் தீர்த்தாள். பாலை நிலத்தின் பஞ்சத்தின் துயர் இத்தனை பல ஆண்டுகளாக மனித மனங்களுக்குள் உறைந்திருப்பதையும், வெக்கையை தண்ணீர் ததும்பும் குளிர்நிலத்திலும் உணர்த்திடும் சாத்தியத்தையும் என்னால் எழுத்தில் கொண்டு வர முடிந்திருக்கிறதா என்பதை வாசகர்கள் தான் சொல்ல வேண்டும். எழுதப்படா வாய்மொழிச் சொல்லாடலை எழுவது என்பது ஒரு துயரம் தான். அந்தப் பக்கங்களை எழுதிய நாட்களில் தண்ணீர் குடித்துக் கொண்டேயிருந்தேன். உதடு வெடித்ததான பிரமையில் நீண்ட நாள் துவண்டு கிடந்திருக்கிறேன். நாவலுக்குள் தாதுவருஷத்தை நான் எழுதிடவில்லை. என்னால் எழுத முடியாது. இதைத் தவிர நான் வேறு எதையும் செய்திட முடியாது. தாண்டித்தான் போக வேண்டியிருந்தது.

    நாவலின் சித்தரிப்பு உச்சம் கொள்கிற இடம் கோட்டை இடிக்கப்படுவதும் சிறுதெய்வங்கள் ஆடிக் கலைத்து செல்லத்தம்மனுடன் அடைக்கலமாவதும் தான். அப்போது செல்லத்தம்மனுக்கு அருகில் கண்ணகி இருந்தாள் என்றொரு வரி வருகிறதே...

    செல்லத்தம்மனும், கண்ணகியும் எதிர்வழிபாட்டின் அடையாளங்கள். செல்லத்தம்மன் சிவனைத் திருமணம் செய்தவள், அமாவாசையன்று திருமணம், இருட்டின் பிரதிநிதி, சிவனை அன்றிரவே வேண்டாம் என்று தூக்கி எறிந்தவள். செல்லத்தம்மன் கோயிலில் மட்டும் தமிழகத்தில் கால் சிலம்போடு கண்ணகிக்குச் சிலை இருக்கிறது. 24 தெய்வங்களும் கிராமக் குலதெய்வங்களின் தாயான செல்லத்தம்மனுடன் தான் அடைக்கலமாவார்கள். சிவனைத் தூக்கி எறிந்தவள், மீனாட்சியின் எதிர்க் குறியீடு. திருவிழாக்கள் மீனாட்சிக்கு பகலில் நடந்தால் செல்லத்தம்மனுக்கு இரவில் தான் திருவிழா என சகலமும் எதிர்க்குறியீடுதான். இவை யாவும் வாய்மொழி வழக்காறுகளாக மக்களிடம் உறைந்திருக்கிறது. பழைய செக்கடி வீதியான சிம்மக்கல்லில் தான் செல்லத்தம்மன் கோயில் இருக்கிறது. மதுரை பெண்ணின் நகரம், மீனாட்சியே கூட பின்னாட்களில் சிவனுடன் இணைக்கப்பட்டவள்தான்.
    நாவலுக்குள் கோட்டை இடிப்பின் அரசியல் மிகநுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்காலத்திய சமூகச் சூழல், பிராமாணிய தந்திரம், காலனிய சதி இவற்றையெல்லாம் எழுதிட அரசியல் புரிதல் மிக அவசியம். அதே நேரத்தில் இப்படி தெய்வங்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திட வேண்டுமா என்கிற குரலை நீங்கள் எதிர்கொண்டதுண்டா?

    இது பற்றி பேச வேண்டும். நான் 2012 இருந்து கொண்டு ஆயிரத்து எண்ணூற்றை எழுத முடியாது. அக்காலத்தின் தந்திர அரசியல் இதற்குள் இருக்கிறது. உழைக்கும் மக்கள் இந்தச் சூழலை எப்படிக் கடந்தார்கள் என்பதும் இருக்கிறது. செவ்வியல் மார்க்ஸியத்தின் மிக முக்கிய கூறான மார்க்ஸிய முரணியக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பெரும் நாவல் காவல் கோட்டம் என்பதற்கான இலக்கிய சாட்சிகளே இக்காட்சிகள். காவல் தெய்வங்களை அப்புறப்படுத்துவதே உழைக்கும் மக்களின் வீரநினைவை அகற்றுவது தான். தான் எப்படி வீழ்த்தப்படுகிறோம் என்றறியாது கண்ணீரோடு இறங்கி அலறிகிறார்கள்.

    எப்படி நாவலின் துவக்கம் பல திறப்பு கொண்டதாக இருக்கிறதோ அப்படியில்லை முடிவு. எந்த நாவலும் கடைசிப் பக்கத்தில் முடிவதில்லை. அதன் பிறகும் வடம் வாசக மனதில் வளர்கிறது. நாவலின் முடிவு கைரேகை பிடித்தலில், பெருங்காமநல்லூர் கலவரத்தில் ஏன் முடிக்க வேண்டும். அதற்குப் பிறகான சமூக அரசியல் செயல்பாட்டை நாவலுக்குள் சேர்த்திருக்க கூடாதா?

    நாவலின் கடைசிப்பகுதி பெருங்காமநல்லூர் சம்பவத்தின் சாயல்தான். என்னுடைய திட்டம் நாவலை 1920க்குப் பிறகு நடத்திச் செல்லக் கூடாது என்பது தான். அதன் பிறகான நாட்களில் வாழ்கிற, வாழ்ந்த அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள் ஊகூ ஹஊகூக்கு எதிராக செயல்பட்டார்கள். அவற்றைப் பதிவு செய்தால் வரலாற்று புனைவாக்கத்தின் கெட்டித் தன்மை குறைய வாய்ப்புண்டு. அதைவிட மிக முக்கியம் காவல் கோட்டம் நாவல் குடிக்காவல் முறைமையைப் பற்றிப் பேசுகிறது. அதிலும் குறிப்பாக குடிக்காவலை ஒழித்திட பிரிட்டிஷ் சர்க்கார் நடத்திய சூழ்ச்சியைப் பற்றிப் பேசுகிறது. 20களுக்குப் பிறகான வரலாற்றிற்கு முற்றிலும் வேறான முகம் இருப்பதால் நான் முடிவுப் பகுதியை இத்தோடு நிறுத்தினேன். 1920 முதல் 1948 வரையிலான வரலாற்றை ஆய்வு நூலாக எழுதியுள்ளேன். பத்து ஆண்டுகள் நான் சேகரித்த பல தரவுகளின் அடிப்படையில் அந்நூல் எழுதப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் அது வெளிவர உள்ளது.

    எழுதப்படாத வரலாறுகளின் தொகுப்பு தான் காவல் கோட்டம்.வாய்மொழி வழக்காறுகள் தொகுக்கப்படும் போது தான் மக்கள்வரலாறுகள் எழுதப்படும் என்று தோன்றுகிறதா?

    நிச்சயமாக, ஆனால் நாம் கடைசி நுனியில் நின்று கொண்டிருக்கிறோம். மரணம் பல வரலாற்றுப் பொக்கிஷங்களை விழுங்கிக் கொண்டேயிருக்கிறது. முதிய கதைப் பெட்டகங்கள் காணாமல் போய்விட்டார்கள், எண்பது வயதிற்கு மேல் ஒரு முதியவர் கூட கிராமங்களில் இல்லை. ஊரின் கதைகளை தொலைத்துக் கொண்டிருக்கிற சமூகமாகி விட்டோம் நாம். தாமதிக்காமல் மிஞ்சியிருப்பவற்றைத் தொகுக்க வேண்டும். உலகமயச்சூழலால் கிராமத்தின் முகம் மாறியிருக்கிறது. மக்களின் பேச்சு மொழி உருமாற்றம் அடைந்திருக்கிறது. வயது முதிர்ந்த பெரியவர்களின் மரணம் ஒரு பெரும் வரலாற்றின் அழிவு என்கிற புரிதல் நமக்கு வந்தாக வேண்டியுள்ளது.

    முல்லைப் பெரியாறு உருவாக்கத்தில் கள்ளர் நாட்டின் மக்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பலியாகியிருக்கிறார்களே இது ஒருவேளை தண்டனைக்குரிய பகுதியாக எண்ணப்பட்டதா?

    ஞரniளாஅநவே ஹசநய என்று அணைக்கட்டு உருவாக்கத்தைச் சொல்ல முடியாது. ஆனால் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அனைவரும், பலியான பலரும் தமிழர்களே. அரசு இயந்திரம் அணைக்கட்டை உருவாக்கியமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தண்ணீர், மற்றது சமூக சீர்திருத்தம். இப்பகுதி மக்களை விவசாயிகளுக்குவது. ஓரிடத்தில் நிலைபெற்ற மனிதக் குழுவாக்குவது. ஒழுங்குபடுத்தப்பட்ட நவீன மயம் விரும்புகிற அரசுக்கு கட்டுப்பட்ட வசக்கப்பட்ட மனிதராக்குவது. இது தான் முல்லைப் பெரியாறு உருவாக்கத்தில் மறைந்திருக்கிற அரசியல்.

    காவல் கோட்டத்தை எழுதி முடித்த பிறகு வாய்மொழி வழக்காறுகளை புனைவாக்கி விட்டோம் என்கிற பெருமித உணர்வு ஏற்பட்டுள்ளதா? அல்லது அட அட இதை விட்டு விட்டோமோ இன்னும் செறிவாக எழுதியிருக்கலாமே என்ற நினைப்பு வந்ததுண்டா.

    தன் அளவில் திருப்தி கொள்ளாதவனே கலைஞன். எழுதி முடித்த பிறகும் கூட அடுத்து அடுத்து கிடைத்த தகவல்களும், தரவுகளும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. களவு குறித்தும், காவலின் நுட்பங்கள் குறித்தும் பலப்பல புதிய முடிச்சுகளும், தகவல்களும் திரண்டு என்னை பிரமிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது.

    நாவலின் கதாபாத்திரங்களில் பெண் கதாபாத்திரங்கள் அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் பெண்களை தியாகம் செய்பவர்களாக மட்டும் ஏன் படைத்தீர்கள்.

    பெண்மையின் முழுரூபமும் காவல் கோட்டத்தில் வெளிப்படுவதாகத் தான் கருதுகிறேன். தியாகம் செய்கிறார்கள் என்பது நிஜம் தான். சொல்லவாருகள், பிரம்மலைக் கள்ளர்கள் என்கிற இவ்விரு இனக்குழுக்களும் தாய்வழிச் சமூகத்தின் எச்சங்கள் என்பதும், சமூகத்திற்கே தலைமை தாங்குகிறவர்களாக இவர்கள் நாவலுக்குள் வாழ்ந்திருக்கிறார்கள். நான் நல்லதங்காளை தாதுவருஷத்தில் எழுதவில்லை. அவளுக்கு நேர்மாறறமாக நான் தாசிகுஞ்சரத்தம்மாளையே முன் வைத்தேன். அன்பை பெருக்கி பசியாற்றிய மணிமேகலையவள் என்பதும், நவீனத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு அசாத்தியமான பெண் பாத்திரம் இருக்கிறதா? எனும் கேள்வி எனக்கிருக்கிறது.

    முடிஅரசில் அசாத்தியமான பிம்பங்கள் சாத்தியம். ஆனால் குடிக்காவலில் மாயாண்டி பெரியாம்பிள்ளையும், சின்னானும் விஸ்வநாதனுக்குச் சமமான பலம் பெற்றது எப்படி சாத்தியமானது.

    மருது சகோதரர்களுடன் நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் என்னுடைய தாத்தா என்று சொல்கிற ஆட்கள் இன்றைக்கும் வாழ்கிறார்கள். ஞாபகங்களின் ஊடாகத்தான் அவர்கள் வரலாற்றை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆய்வாளர்களுக்கு அகப்படாத பெரும் வரலாறு புதைந்து கிடக்கிறது. அரசனையும், அதிகாரத்தையும் விட மக்கள் மகத்தானவர்கள் அவர்களின் வரலாறே மகத்தானது என்பதால் தான் விஸ்வநாத நாயக்கனின் ஆகிருதியையும் தாண்டிச் செல்கிறவனாக இருக்கிறான் மாயாண்டி பெரியாம்பிள்ளை. அவனே இந்த நாவலின் உயிர்ப்புள்ளி. எல்லாவற்றையும் தாண்டி மதுரையின் பிரம்மாண்டமும், தாதனூரின் வசீகரமும் வாசகனுக்குள் இறங்கத்தான் செய்யும். காலம் காலமாக நம்பிக்கையுடன் வாழ்ந்த சமூகத்தை அதிகாரத்தைக் கொண்டு அப்புறப்படுத்திடத் துடிக்கிறது பிரிட்டிஷ். அவலத்தில் துயருற்ற எளிய மக்களின் கதையே காவல் கோட்டமாக வடிவம் பெற்றது.

    மதுரையைப் பற்றிய இதுவரையிலான பதிவுகள் யாவும் எதிர்மறையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபம் கொண்டே நீங்கள் பேனாவை இதன் வசீகரத்தைத் தீட்டிட பயன்படுத்தினீர்களா?

    மதுரையை இரண்டாயிரம் வருடங்களாக கலைஞர்கள் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். மாங்குடி மருதனார், இளங்கோவடிகள், நக்கீரன், பரஞ்சோதி முனிவர், குமரகுருபர் என நீண்ட வரிசையில் எழுதிப் பார்த்தாலும், எழுதித் தீர்க்க முடியவில்லை. மதுரை எத்தனை முறை அழிந்திருக்கிறது தெரியுமா? ஆனாலும் ஒரு அடி கூட நகர்ந்தது இல்லை. மதுரை ஆணி வேரில் தழைத்த கொடி. தத்தநேரி சுடுகாட்டிற்குக் கூட இரண்டாயிரம் வயது என்பதற்காகத்தான் தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த சுடுகாட்டில் இருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக மனிதப்புகை வெளியேறிக் கொண்டேயிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் இந்த நகரின் பழமையும், வரலாறும் பிடிபடும். பொதுப்புத்தியில் இந்த நகரைப் பற்றி படிந்திருக்கிற சகல தவறான அபிப்ராயங்களையும் கழட்டி எறிந்திடும் செயலையும் செய்திருக்கிறது காவல் கோட்டம்.

    புத்தாண்டு கால உழைப்பின் புலனாகக் கிடைத்த பரிசு சாகித்ய அகாடமி தனிப்பட்ட முறையில் உங்களின் இழப்பு......

    என்னுடைய செல்லக்குழந்தைகளின் பால்யத்தை தவற விட்டிருக்கிறேன். இது ஒரு போதும் மீளப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மனதில் நிறைத்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் அவஸ்தையுடன் அலைவதைப் போல துரதிஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்.

    காவல் கோட்டம் எழுதிய போதும், அது கவனம் பெறுகிற போதும் இயல்பாகவே ஒரு பெருமிதம் ஏற்படத்தான் செய்யும். இது இதன் அளவிற்கு கவனிக்கப்பட்டுள்ளதா? அல்லது போதவில்லையா?

    தமிழ் இலக்கியச்சூழல் அக்கறையுடன் உழைத்து உருவாக்கப்பட்ட பல படைப்புகள் அதற்குரிய கவனத்தைப் பெறாமல் போயிருக்கிறது. 150 பிரதிகள் கூட விற்காமல், கிடப்பில் போடப்பட்ட படைப்புகளுடன் ஒப்பிடுகையில் காவல் கோட்டம் அக்கறையுடன் கவனிக்கப்பட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். ஆனாலும் கூட காவல் கோட்டம் குறித்து இதனுடைய பங்களிப்பு என்ன என்கிற படைப்பாக்க ரீதியான விவாதங்கள் போதுமானதாக இருந்ததாகச் சொல்ல முடியாது.

    மார்கிஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அரசியல் பணியாளர் நீங்கள் மார்க்ஸிய தத்துவதைச் சட்டகத்திற்குள் தான் இயங்கு முடியும் என்கிற மனத்தடை படைப்பாக்க நடவடிக்கையின் போது உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?

    பொருள் முதல் வாதத்தின் அடிப்படையில் தான் வரலாற்றை பார்க்க முடியும். வரலாற்று முரணியக்கத்தை மார்க்ஸிய அடிப்படையில் உற்று நோக்குகிற போது மட்டுமே பல முடிச்சுகளை அவிழ்க்க முடியும். வரலாறு பற்றிய மார்க்ஸிய பார்வை தத்துவத்திற்கு மாபெரும் கொடை. இவையாவும் எனக்கு நாவலை வளர்த்தெடுக்க உதவியே செய்திருக்கும் என்று நம்புகிறேன். மார்க்ஸ் இந்தியா குறித்து எழுதிய சொல்லாடல்களின் கலை வடிவமே காவல் கோட்டம் என்கிற மதிப்பீடு கூட மிகச்சரியானது என்று தான் நினைக்கிறேன்.

    காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கும் என எதிர்பார்த்தது உண்டா?


    காவல் கோட்டம் எழுதப்பட்ட பிறகு இரண்டு ஆண்டுகளில் கனடா இயல் விருது உள்பட ஐந்து முக்கிய விருதுகள் கிடைடத்துள்ளன. ஆனால் சாகித்ய அகாடமி விருது முற்றிலும் எதிர்பாராத விருது.

    தமிழ் இலக்கியச் சூழலில் மட்டும் இப்போது மட்டும் இல்லை. எப்பொழுதும் விருது அறிவிக்கப்பட்ட உடனேயே பெரும் சர்ச்சைகள் கிளம்புகிறதே எதனால்? இது தமுஎகச பொதுச் செயலாளரிடமும் கேட்கப்படுகிற கேள்வியாக எடுத்துக் கொண்டு பதில் சொல்லுங்கள்.

    இது மட்டும் தான் அரசு சார் நிறுவனம் தருகிற உயரிய விருது. சர்ச்சைகள் எழுத்தாளர்களிடம் உருவாவது ஒன்றும் தவறில்லை. அதன் நோக்கங்கள் வேறு வேறாக இருக்கின்றன. இதே சாகித்ய அகாடமி கடந்த காலங்களில் தகுதியற்ற படைப்புகளுக்கு விருது தந்திருப்பது உண்மை தான். தன்னாட்சி நிறுவனமான சாகித்ய அகடாமியின் விருது நடவடிக்கைகளில் இன்னும் வெளிப்படைத் தன்மை தேவை என்று நான் நினைக்கிறேன். இப்ப எனக்கு விருது தரப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை நோக்கி முன் வைக்கப்படுகிற கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். நான் விருதிற்கோ, போட்டிக்கோ புத்தகம் அனுப்பவில்லை. தேர்வு செய்தது சாகித்ய அகாடமி அப்படியானால் எழும்பி வருகிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், தார்மீகக் கடமையும் சாகித்ய அகாடமிக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். படைப்பைத் தேர்வு செய்கிற போது ஏன் இந்த படைப்பு தேர்வு செய்யப்படுகிறது. தேர்வு முறைகள், வந்த படைப்புகள் பற்றி வெளிப்படையாக சாகித்ய அகாடமி அறிவிக்க வேண்டும்.

    புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் கூட வாசிப்பின் ஆழ அகலங்களில் பார தூரமான மாற்றங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லையே. இலக்கியச் சூழல் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருக்கிறதா. ஏதாவது மாற்றம் நிகழும் என்று நினைக்கிறீர்களா?

    மாற்றத்தை அவசியம் உருவாக்கியே தீர வேண்டும். வாசிப்பின் மீது ருசி கொண்ட பெரும் வாசக பட்டாளத்தை உருவாக்காமல் இது சாத்தியமில்லை. மனித மனதை அதன் செயல்பாட்டை அது எப்படி இயங்குகிறது என்பதை கண்டறிய நம்பிக்கையில் இருப்பது இலக்கியம் மட்டுமே. மனதின் நுட்பங்களை, கூறுகளை இலக்கியம் மட்டுமே பதிவு செய்யும். மனதை வெல்லும் மகத்தான கருவி இலக்கியம் என்கிற புரிதல் அமைப்புகளில் செயல்படுகிறர்வளுக்கு வர வேண்டும். குறிப்பாக இடது சாரி அமைப்புகளில் வாசிப்பில் ஏற்படுகிற பாரதூர மாற்றம் இச்சமூகத்திற்கு பெரும் பங்களிப்பைச் செலுத்தும். எனவே வாசிப்பை நேசிப்போம். இதுவே இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.

    நேர்காணல்: ம.மணிமாறன் ; நன்றி: செம்மலர்

    Labels:


    >>>மேலும் வாசிக்க>>>

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 1/23/2012 11:15:00 AM   0இது பற்றி...!
    அடிமை மானுடம் – சீனு
    Friday, January 20, 2012
    இனிய ஜெ.எம்.,

    யாரோ ஒரு நண்பர் உங்கள் பிளாக்கில் கேட்டிருந்தார். இப்படியெல்லாம் தமிழகத்தில் அடிமைமுறை இருந்ததற்கான ஆதாரம் ஏதும் உண்டா என்று. பாவம் அவர் தெருவிலேயே இறங்காதவர் போல் இருக்கிறது. சில மாதங்கள்முன் கடலூரில் ஓர் இளம்பெண்ணைப் பார்த்தேன். குற்றுயிராய் வந்து சேர்ந்தாள். விழுப்புரம் பக்கம் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் “கொத்தடிமை’’. ஆம், கடனை வேலை செய்து அடைக்கும் கொத்தடிமை. பாலியல் கொடுமை தாங்காமல் எதிர்க்க, வழக்கம்போல் கந்தலாக்கப்பட்டாள். விழுப்புரத்தில் பார்க்க முடியாதென சொல்லிவிட கடலூர் வந்து சேர்த்தனர்.

    ஏதோ விழுப்புரத்தில் ‘பெரிய ஆண்டை’. விஷயம் ரசத்தில் விழுந்த அப்பளமா ஆகிப்போச்சு. வந்து சேரும்போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நிர்வாணமாக. எலும்பு வரிகள் தெரியும் மெல்லிய உடல். இளமைக்கான சதைப்பற்று அப்போதும். உடம்பெங்கும் வரிவரியாய்க் காயம். வீங்கிய முகம். கிழிந்த உதடு. இடது முலைக்கண் இருந்த இடத்தில் அதற்குப் பதில் காயம். பல்தடம். கடித்துத் துப்பிவிட்டார்கள். மெல்லிய அகட்டிப்போட்ட தொடைகள், பிறப்புறுப்பில் செருகி இருந்தது சூளை எரிக்கப் பயன்படும் கருவேல மரத்தின் சிம்பு ஒன்று.

    விழுப்புரத்தில் சில இடங்களில் இன்னும் இரட்டைக் கிணறு. இரட்டை டம்ளர் உண்டு. எதுவும் ‘ஆண்டைகளை’த் தாண்டி வெளிவராது. எழுச்சித் தமிழர் இலக்கிய முரசு, ஜனநாயகத்தின் நாலாவது தூணான மீடியா எல்லோருக்கும் இது தெரியும். ஆனால் எதுவும் மாறாது. வெளியேறுமுன் அந்தப்பெண் என்ன புலம்புகிறாள் எனக் காது கொடுத்தேன். ஒரே உச்சாடனம் திரும்பத் திரும்ப, “ஏம்மா என்னைய பெத்த?”

    நேற்று இரவு மகம். தண்ணீரில் இருந்து மீனவர்கள் தரைக்கு வரும் நாள். வருடாந்திர வழக்கமாக இம்முறையும் வன்னியர் மீனவர் இடையே வெட்டுக்குத்து. கலவரத்தில் மீனவர் ஒருவர் பலி. அடுத்த வருட மகம் நிச்சயம் வன்னியர் ஒருவரின் களபலியோடுதான் துவங்கும். 92 அல்லது 93இல் பத்தாவது முடித்து கடலூர் ஊர்பூரா நாயாக ஓடிய காலத்தில் மூண்டது அந்தக் கலவரம். மீனவர் ஒருவர் தன் கர்ப்பிணி மனைவியை டூவீலரில் ஆஸ்பிடல் கொண்டு போன வழியில் சிறு மோதல். மோதியவர் வன்னியர். மோதல் முற்றி கர்ப்பிணியின் வயிற்று சிசு இறந்துபோனது. ஒரு வாரம் கடலூர் ரணகளம் ஆகிப்போனது. காரணங்கள் புறம் தள்ளப்பட்டு மனிதர்கள் வீதியில் மிருகங்களாக உலவினர். சட்டம், வழக்கம்போல லீவில் போனது.

    ஒருநாள் மொட்டைமாடியில் நானும் என் வயதொத்த சிறுவர்களும் பீதியில் பதுங்கிக் கிடந்தோம். தெருவெங்கும் அலங்கோலம். எரியும் டயர்கள், உடைந்து சிதறிய பாட்டில்கள், ஒற்றை செருப்புகள், மூடியகதவுகள், எரியும் தார் டிரம். ஒருவரை இழுத்து வந்தனர். மனைவி கதறித் தீர்த்தாள். அவனை கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து ஜட்டியோடு நிற்க வைத்தனர். தங்கச்சங்கிலி மோதிரத்தைக் கழற்றிக்கொண்டான் ஒருவன். மனைவியை இருவர் பிடித்து மாறி மாறி அறைந்து அவள் தொய்ந்து துவளத் தூக்கிக் கணவன் முன் நிறுத்தினர். கணவனை ஒருவன் நெருங்கினான். ஸ்டிக்கர் வெட்டு கத்தியைப் பிரித்தான், மீனவன் உடலில் எங்கெங்கு கட்டுமஸ்தாக சதை உள்ளதோ அத்தனையும் கேக் துண்டுபோல வெட்டி எடுத்தான். ஓலம், ஓலம், ஓலம், மரண ஓலம் – என் பிணம் சிதையில் எரியும்போது மட்டுமே என் காதைவிட்டு விலகப்போகும் ஓலம்.

    பிடியில் மனைவி துள்ளித் துள்ளி விழுந்தாள். எடுத்த சதைத் துண்டுகளை எரியும் தார் டிரம்மில் போட்டான். பின் மனைவி வசம் வந்தனர். ‘வேணா வேணா’என ஈன சுரத்தில் கதறினான் கணவன். மனைவி கைகளை விரித்துப் பிடித்துக் கொண்டனர். கால்களை இருவர் விலக்கிப் பிடித்துக் கொண்டனர். நீலமேகம் கைநிறைய மண்ணள்ளி அவள் வாயில் குமட்டக் குமட்டக் கொட்டி மூடினான். இனி அலறல் இல்லை.

    சேலையைத் தூக்கினான். கணவன் தலைதொங்கிக் கிடந்தான். இடதுகையால் யோனியைப் பிரித்து முடிந்தவரை விலக்கினான். கைநிறைய மண்ணள்ளி உள்ளே கொட்டினான். நடுவிரல் விட்டுக் குத்தினான். திரும்ப மணல் நிரப்பினான். மனைவி தொய்ந்தடங்கினாள். கணவன் உயிரைத் திரட்டிக் கத்தினான். “டேய் தேவுடியா புள்ளைகளா என்னக் கொன்னுடுங்கடா”. குழு அவன் கட்டை அவிழ்த்தது. கைகளைப் பின்புறம் கட்டினர். அவனைத் தலைகீழாகத் தூக்கி எரியும் தார் டிரம்மில் புதைத்தனர். விலகி உரக்க ஊளையிட்டபடி கலைந்து காணாமல் போயினர். வானுக்கு நிர்வாணம் காட்டியபடி அவன் இளம் மனைவி அசைவின்றிக் கிடந்தாள். ஆறு நாள் கலவரம், வன்னியர் மூவர் மீனவர் மூவர் பலி சமன் கண்டதும் கலவரம் ஓய்ந்தது.

    படையாச்சிக்கு எதிரான மீனவர் கதைகள் அனேகம். தரைக்கும், தண்ணீருக்குமான போர். நான் வேறு, நீவேறு. இதேதான் மண்டைக்காட்டிலும் நடந்திருக்கும். தேசத்தின் மூலை எங்கும் நடந்து கொண்டிருக்கும். அழிவு, அழிவு, நம்மை நாமே கொன்று புதைத்துக் களியுவகை எய்துதல். ஹோமோசேபியன் இனமான நாம், நம்மைப்போலவே இருந்த நியாண்டர்தால்களைக் கொன்றொழித்து வந்தவர்கள் என்று படித்திருக்கிறேன். மரபணுவில் உறிப்போனது படைப்பிலேயே மட்டமானவன் இன, நிற, ஜாதி, மத, தேச, பொருளாதாரக் காரணிகள் கொண்டு பிறனை ஒடுக்கும் ஒருவன். “மனிதன் எத்தனை மகத்தான சொல்” என்று சொல்லி விம்மியவனைத் தேடுகிறேன், எரியும் தார் டிரம்மில் புதைக்க.

    இதோ இப்போது என் எழுதும் மேஜையில் ‘காந்தியின் இறுதி 200 நாட்கள்’ புத்தகம் இருக்கிறது. இதைப்போலப் பல்லாயிரம் காட்சிகளை காந்தி கடந்து சென்றிருக்கிறார். அதன் பின்னரும் அன்பு எதையும் மாற்றி வைக்கும் என்று உரக்க உரக்கச் சொல்கிறார். மனிதன் மகத்தானவன்தான். காந்தியைப் போன்ற ஒருவன் மகத்தானவன்தான். இதை எழுதுவது உங்களுக்கு மட்டுமல்ல இங்கே என் தேசத்தில் கலந்துவிட்டிருக்கும் காந்தியின் ஆன்மாவுக்கும் இதை எழுதுகிறேன். எழுத எழுத அன்றைய காட்சி உக்கிரமாக ஏறி ஏறி வருகிறது. அழுகை வருகிறது. என்னால் எதுவும் செய்ய முடியாது. இன்றும் தூங்கப்போவதில்லை. இனிய ஜெ.எம்., தூங்கவேண்டும், ஒரே ஒருநாள் கனவுகள் ஏதுமின்றி, மிகமிகப் பாதுகாப்பு உணர்வின் மடியில் ஒரே ஒருநாள் தூக்கம் போதும். யாரிடமும் சொல்லாதது உங்களிடம் சொல்லிவிட்டேன், மனம் வெறுமையா இருக்கு.

    சீனு, கடலூர்.

    http://www.jeyamohan.in/?p=23200

    >>>மேலும் வாசிக்க>>>

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 1/20/2012 09:57:00 PM   0இது பற்றி...!
    கூடங்குளம் இன்று
    Wednesday, January 11, 2012
    கூடங்குளம் இன்று : ஒரு நேரடி கள ஆய்வு அறிக்கை
    கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை உடனே கைவிடு


    அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி, மு.சிவகுருநாதன்

    (முகவரி: ப்ளாட் எண் 80, கே. கே. நகர். மதுரை- 625 020. செல்: 94441 20582 )



    ‘மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்’, தமிழ்நாடு (People’s Union for Human Rights), ‘மற்றும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’, புதுச்சேரி (Federation for People’s Rights) ஆகிய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நாங்கள் நால்வரும் இரண்டு மாதங்களுக்குப் பின் இரண்டாம் முறையாக ஜனவரி 05, 06 (2012) தேதிகளில் கூடங்குளம் சென்று மக்களைச் சந்தித்தோம். இடிந்தகரையில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டு நாட்களும் முழுமையாகக் கலந்து கொண்டோம். போராடும் மக்களுடன் விரிவாகப் பேசினோம். முனைவர் சுப.உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் குழுவினரிடமும் உரையாடினோம்.

    சென்ற மாதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் ரஷ்யா சென்று அங்குள்ள தலைவர்களிடம் அளித்த வாக்குறுதியை எல்லோரும் அறிவோம். இரண்டு வாரங்களில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதற் கட்ட அணு உலைகள் செயல்படும் என அவர் கூறியிருந்தார். அவர் கூறி இப்போது சுமார் ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்தத் திசையில் ஏதும் வேலைகள் நடை பெறுகின்றனவா, போராடும் மக்களின் மனநிலை இப்போது எப்படி உள்ளது முதலானவற்றை நேரில் கண்டறிவதே எங்களின் நோக்கம்.

    கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் எவ்விதத் தொய்வுமில்லாமல் நடைபெற்று வருகிறது. இடிந்தகரையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் 145 நாட்களாகத் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. தூரப் பகுதிகளிலிருந்து வருகிறவர்களின் சிரமங்களைக் குறைக்கும் பொருட்டு தற்போது கூடங்குளம் மற்றும் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த மக்களை மட்டுமே தொடர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு போராட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் தேவைப்பட்டால் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் வந்து கலந்து கொள்ள எப்போதும் தயாராக உள்ளதாகப் போராட்டக் குழுவினர் கூறினர். தொடர்ந்து பல மாத காலங்களாகத் தொழில் செய்யாமல் போராட்டத்தில் கலந்து கொள்வதால் ஏற்படும் வருமான இழப்பைக் குறைக்க வேண்டி தொழில்களுக்குச் செல்லும் ஆண்களுக்கு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு நாள் போராட்டத்தின் போதும் அதிக அளவில் பெண்களும் சற்றே குறைந்த எண்ணிக்கையில் ஆண்களும் கலந்து கொள்கின்றனர்.

    நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் சுமார் 300 பேர்கள் உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றிருந்தனர். ஜனவரி 5 அன்று சென்னையிலுள்ள ஆசிய இதழியல் கல்லூரி மாணவர்கள் வந்து போராட்டத்திலிருந்த மக்களிடம் பல கேள்விகளைக் கேட்டனர். இந்த அணு உலையில் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை என அப்துல் கலாம் போன்றவர்கள் சொல்வது, இப் போராட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது என மத்திய அமைச்சர்கள் பரப்புகிற செய்தி உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய கேள்விகளும் கேட்கப்பட்டன. மிகவும் உணர்ச்சி வசப்பட்டதோடு கடுமையாகவும் உறுதியாகவும் இக்குற்றச்சாட்டுகளை மக்கள் மறுத்தனர். சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்திற்கு எங்களுக்கு எதற்குப் பணம், தேவைப்படும் எனக் கேட்ட அவர்கள், குறைந்த செலவையையும் கூடத் தாங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை விளக்கினர். அணு உலை மற்றும் அதன் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி அம்மக்கள், குறிப்பாகப் பெண்கள் கொண்டிருந்த தெளிவு எங்களுக்கு வியப்பை அளித்தது. போராட்டத்தின் ஊடாக மக்களின் உலகியலறிவு பெரிதும் வளர்ந்துள்ளதை எங்களால் காண முடிந்தது.

    குழந்தைகளுக்குப் பாலூட்டிக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும் தாய்மார்கள், பீடி சுற்றிக் கொண்டே உண்ணாவிரதமிருப்போர் என்பதாகப் போராட்ட அரங்கு காட்சியளித்தது.

    தாங்கள் ஒன்றும் மின் ஆற்றலுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் வரும் ஜனவரி 14 முதல் மின் சிக்கனத்திற்காக, அதிக மின் ஆற்றலைக் கோரும் குமிழ் விளக்குகள் (bulbs) பயன்படுத்துவதை நிறுத்தப் போவதாகவும் போராட்டக் குழுவைச் சேர்ந்த மில்டன் எங்களிடம் கூறினார்.

    அணு உலை உள்ள வளாகத்திற்குள் போகிற வாகனங்கள், செல்கிற அதிகாரிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை போராட்டக் குழுவினர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தில் அமர்ந்தவாறே கண்காணிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பகல் ஷிஃப்டிற்கு 120 அதிகாரிகளும் இரவு ஷிஃப்டிற்கு 60 அதிகாரிகளும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களையும் கூட, அணு உலைக்காகக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள யுரேனியம் ஆக்சைட் எரிபொருள் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது முதலான பணிகளுக்காக மட்டுமே அனுமதிப்பதாகப் போராட்டக் குழுவினர் கூறினர். அணு உலையைச் செயல்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒருவர் உள்ளே நுழைந்தாலும் அவர்களைத் தடுத்துப் பிடித்து வெளியேற்றுவோம் என உறுதிபடக் கூறினர். மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரையும் கூடக் கூடுதலாக யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. தமிழக அரசும் உள்ளே போய்வருவோரைக் கண்காணிக்கிறது. மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அணு உலையைச் செயல்படுத்தக் கூடாது என்கிற சட்ட மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் இக் கண்காணிப்பை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்கிறார். தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என மக்கள் மிக உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளதை நேரில் கண்டோம்.

    எனினும் நேற்று அங்கு நடந்த ஒரு நிகழ்வு மத்திய அரசின் சதி நோக்கத்தையும் மக்களின் உறுதியையும் காட்டுகிறது. உள்ளே உள்ள சுமார் 60 மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கான உணவுக்கான பொருட்களை மட்டும் இதுவரை போராட்டக் குழுவினர் உள்ளே கொண்டு செல்ல அனுமதித்து வந்தனர். திடீரென அதிக அளவில் உள்ளே உணவுப் பொருட்கள் செல்வதைக் கண்டு அய்யப்பட்ட கூடங்குளம் மற்றும் இடிந்தகரையைச் சேர்ந்த பெண்கள் நேற்று (ஜனவரி 5) அணு உலை நுழை வாயிலில் கூடி போக்குவரத்தைத் தடுத்து மறியல் செய்தனர். உள்ளே செல்பவர்களில் கொஞ்சப் பேர்களைத் தினந்தோரும் நிறுத்தி வைத்துள்ளதாகப் போராட்டக் குழுவினரும் மக்களும் ஐயம் கொண்டு இம் மறியல் போராட்டத்தை நடத்தினர். உடனடியாக மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று உள்ளே ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்து நாளைக் காலை (அதாவது இன்று ஜனவரி 7) மக்களிடம் தெரிவிப்பதாக வாக்களித்த பின்னரே மறியல் செய்த பெண்கள் கலைந்தனர்.

    கூடங்குளம் மற்றும் இடிந்தகரை ஊரெங்கும் உளவுத் துறையினர் குவிக்கப்பட்டு வெளியூர்களிலிருந்து வருவோர் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்காணிக்கப் படுகின்றனர்.

    கோரிக்கைகள்

    தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சற்றும் மதியாமல் இரண்டு வாரங்களுக்குள் அணு உலை செயல்படுத்தப்படும் என ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அணு உலையைச் செயல்படுத்த அங்கு தற்போது வாய்ப்பே இல்லை. கூடங்குள அணுமின் நிலையத் தலைவர் காசிநாத் பாலாஜி ஃப்ரன்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் உள்ளூர் மக்களின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இல்லாமல் அணு உலையைச் செயல்படுத்த இயலாது என ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கிறோம். உள்ளூர் மக்களின் அச்சம் இம்மியும் குறையவில்லை. எக்காரணம் கொண்டும் அணு உலையைச் செயல்படுத்த அவர்கள் அனுமதிக்கப் போவதும் இல்லை. இந்நிலையைக் கணக்கில் கொண்டு உடனடியாக மத்திய அரசு கூடங்குள அணு உலை நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவிக்க வேண்டும்.
    தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து உடனடியாக 1000 மெ.வா மின்சாரத்தை அளிக்க வேண்டும்.
    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழக மக்களின் இவ்விரு கோரிக்கைகளையும் மத்தியில் வற்புறுத்தி நிறைவேற்ற வேண்டும்.
    அறிவியல் ஆய்வுகளுக்காக ஒதுக்கப்படும் நிதி அளவை அதிகரிப்பதோடு, அதில் பெருந்தொகையை புதுப்பிக்கத்தக்க மாற்று மின் உற்பத்தித் திட்ட ஆவுகளுக்காகச் செலவிட வேண்டும். மாற்று மின் திட்டங்களைப் பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டும்.
    தமிழகத்தில் ஆங்காங்கு கூடங்குளத் திட்டத்தைச் செயல்படுத்து எனக் கோரிக்கை வைத்துச் சிறிய அளவில் போரட்டங்கள் தூண்டிவிடப் படுவது வருந்தத் தக்கது. தமிழக மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய முல்லைப் பெரியார் அணை குறித்த பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் அளிக்கிற முக்கியத்துவம் பாராட்டுக்குரியது. கூடங்குளப் பிரச்சினையிலும் கவனமாக இருந்து மத்திய அரசின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
    ஜனவரி 07, 2012

    மதுரை

    >>>மேலும் வாசிக்க>>>

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 1/11/2012 11:01:00 AM   0இது பற்றி...!
    அமானுஷங்களுடன் வாழ்தல் (பகுதி 9)
    Wednesday, January 4, 2012
    அமானுஷங்களுடன் வாழ்தல்- (பகுதி 9)

    சுகன்


    கோளாவில் செய்கைக்காரருக்குச் சொல்லுமாப்போலைதான் நான் பிரபாகரனுக்குச் சொன்னேன். அவரைத்தேடி எப்போதும் வீடு கொள்ளாத அளவு சனக்கூட்டம்.
    வந்தவர்கள் அவர் பார்வையில் படுவதற்கே பலநாளாகி, அவர் வீட்டிலேயே மரணத் துடக்குகள் அதிகமானபோதுதான் அவரது செய்கைகளுக்காக அதிக அமானுஷங்கள் தேவைப்பட்டன.
    ஒரு அமானுஷத்தை ஒரு தேவைக்காக மட்டுமே பயன்படுத்தின் சிறப்பு. ஒரு பயனாளியின் தேவைக்கு பல அமானுஷங்கள் தேவைப்படலாம்.
    அவரது தேவைக்கு இருக்கிற எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டுக்கொண்டேயிருந்தார். சாதாரணமாகத் தன்பாட்டில் நடந்து போய்க்கொண்டிருப்பனவற்றை அவர் தலைகீழாக நடக்க வைத்துக்கொண்டிருந்தார்.
    ஆயிரம் வருசமாக அமுங்கிப்போய் இருந்த பல அமானுஷங்களை எழுப்பி உருக்கொடுத்து ஒன்றுக்கெதிராக ஒன்றை ஏவி விட்டுக்கொண்டேயிருந்தார்.


    கோளாவில் செய்கைக்காரர் சவச்சாம்பல்களைத்தேடி ஒவ்வொரு சுடலையாக
    அலைந்துகொண்டேயிருந்தார். அவரிடம் செய்கைக்கு முன்னர் வந்தவர்கள் அவரை இப்போது மயானத்திற் பார்த்தார்கள். அவரது வசியத்திற்கு அகப்படாது தப்பியோடிய அமானுஷங்களும் உண்டு. கொக்குவில் பொற்பதி விநாயகர் கோவிலில் பெருங்கதை படிக்கப்போன என்னிடம் அங்கொருவர் அவர் சுடுகாட்டுச்சித்தர் என குறிப்புரைத்தார். நான் வானத்தை மேல்நோக்கி கும்பிட்டேன்.

    கொத்தி(கொற்கை)த் துறைச் சுடலையில் தான் இறுதியாக அவரை எரியூட்டிக் காடாத்தினோம். அவர் இறக்கும்வரை பொறுமைகாத்த பொலிசாருக்கு நான் நன்றி கூறினேன். வடமராட்சியிலிருந்து தாயோடு வந்திருந்த பதினேழு வயதேயான ஓர் இளம் பெண்ணிற்கு கடைசியாக அவர் கருக்கலைப்புச் செய்திருக்கவேண்டும்.
    பொலிசார் அவர் செய்கை வீட்டைக் கடுமையாகச் சோதனையிட வந்தபோது நான் அவர்களைத் தடுத்தேன். அதை இரகசியமாகச் செய்யும்படி நான் அவர்களை வலியுறுத்தினேன். அவர்களும் சம்மதித்தனர். எனது வேண்டுகோளின்பேரில் அவர் வீட்டு நிலங்கள் உழப்பட்டன. இளம் பெண்கள், குழந்தைகள் எனப் பல எலும்புக்கூடுகளைப் பொலிசார் மீட்டனர். கடைசியாக நவதானியம் விதைத்து அவர் வீட்டை நான் சாந்தி செய்து காவல் பண்ணினேன்.

    அரிது அரிது மானிடராதல் அரிது.

    Labels:


    >>>மேலும் வாசிக்க>>>

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 1/04/2012 03:19:00 PM   0இது பற்றி...!
    அ.மார்க்ஸ்- சில மதிப்பீடுகள்
    Tuesday, January 3, 2012
    அ.மார்க்ஸ்- சில மதிப்பீடுகள்
    தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு,
    சென்னை, 18.10.2010


    "A.Marx - Sila Madhippeedugal"-Book Release Function held in Chennai on 18.10.2010 at LLA Building. This book contains essays of various Tamil Writers and Social Activists on veteran Tamil Writer and Social Activist A.Marx. It was compiled by Writer Meena. Audio recording and Movie making were done by Yuvabharathi Manikandan



    நன்றி: யுவபாரதி மணிகண்டன்

    Labels:


    >>>மேலும் வாசிக்க>>>

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 1/03/2012 09:54:00 AM   0இது பற்றி...!
    அமானுஷங்களுடன் வாழ்தல் (பகுதி 8)
    Friday, December 30, 2011
    அமானுஷங்களுடன் வாழ்தல் (பகுதி 8)

    -சுகன்


    "...
    ஆன காலையில் வந்து வந்து அடுசமர் ஆற்றி
    மான வேல் படைப் பண்ணவன் தூதனால் மற்றை
    ஏனையோர்களால் முத்திற வீரர்கள் இறந்தார்
    மீனமாய்க் கடல் புகுந்தனன் இரணியன் வெருவி.

    ஏற்றது ஓர் சிலை இழந்தனை மானமும் இன்றித்
    தோற்று வந்தனை தொல் வரத்து இயற்கையும் தொலைந்தாய்
    சீற்றம் உற்றிலன் முருகவேள் அவன் சினம் செய்யின்
    ஆற்றுமோ வெலா அண்டமும் புவனங்கள் அனைத்தும்.

    அன்னது பலரும் கேளா அழகிது என்று எடுத்து மைந்தன்
    பொன் உடல் ஒரு சார் உய்த்துப் போற்றினர் போற்றலோடும்
    மன்னவன் வெகுண்டு நம்தம் மாற்றலர் தொகையை எல்லாம்
    என் இளையோனுக்கு ஊணா அளிப்பன் என்று எண்ணம் கொண்டான்.
    …"

    கந்த புராணம் - பானுகோபன் யுத்தப்படனம் பாடி முடிந்தது! உரையும் கூறி முடிந்தது!


    நிறைவின் அறிகுறியாக...

    „... பவளமால் வரையும் நிலவெறிப்பதுபோற்
    பரந்த நீற்றழகு பொற்சுடம்பின்...“

    என்று குரலெடுத்துப் பாடிக்கொண்டிருந்த என்னிடம் கோளாவில் செய்கைக்காரர் பிரபாகரனைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்.

    „ஏழுவருசத்துக்கு நீ உப்பிடியே அந்தரிச்சுக்கொண்டு திரியப்போறாய்; இப்ப நீ வந்திருக்கிறது என்ரை படிப்பைப் குழப்ப இல்லையோ?“

    „ இல்லை அண்ணை, கோயில் விசயமா…, விக்கிரக வார்ப்புகளுக்கெண்டு இந்தியா போறதெண்டனீங்கள்!... ஒரு இடத்திலை கொள்ளையா நகையள் தாண்டிருக்குப்போலை! வந்து குறிப்புக் காட்டினீங்களெண்டா உதவியா இருக்கும். தங்கச்சியின்ரை பிள்ளையள் பட்டினியாக்கிடக்குது“ என்றான் பிரபாகரன்.
    கொள்ளையாய் நகை புதைக்கப்பட்டிருக்கின்றது, அவற்றைப் பூதங்கள் காவல் காத்து நிற்கின்றன. அந்தப் பூதங்களின் கட்டைக் குலைத்து, அவற்றை ஓடப்பாய்ச்சிய பின்னரே புதையல் நகைகளை அள்ளலாம் என்பது பிரபாகரன் நினைப்பு. அத்தோடு இந்தியா சென்று விக்கிர வார்ப்புக்களையும் எடுத்துவர அவை நன்கு உதவும் என்று சொல்லாமல் சொல்கிறான் அவன்.

    „இஞ்சை பார் :

    …பசித்தார் பொழுதும் போம் போம்,
    பாலோடு அன்னம் புசித்தார் பொழுதும் போம்! போம்!...

    பிரபாவதியின்ரை கதை படிச்சுக்கொண்டு என்னிட்டை வராதை.

    தங்கண்டை ஆற்றல் எல்லாம் முடிஞ்சவுடனை தெய்வங்களாலை வாழ ஏலாது, தங்களை அழிச்சுக்கொள்ள விரும்புவினம், அவயள அழிவிலிருந்து காப்பாத்துறதுதான் இப்ப வேலை.எல்லாத்தெய்வங்களும் பலமிழந்து போய்க்கிடக்கினம். இந்த நேரத்திலை உதுகளை அதை எடுக்கிறன், இதை எடுக்கிறன் எண்டு அவிழ்த்துவிடாதை. பிறகு எல்லாம் நாசமாப் போகும்“

    மீண்டும் நிறைவின் பாடலைப் பாடத்தொடங்கினேன்:

    „பவளமால்வரையும் நிலவெறிப்பதுபோற்
    பரந்த நீற்றழகு பொற்சுடம்பின்
    தவளமா களீற்றீன் நின்றாடிய
    பரமன் சிறுவனை…“

    Labels:


    >>>மேலும் வாசிக்க>>>

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 12/30/2011 12:00:00 PM   0இது பற்றி...!

    மேலும் அறிய

    Name: NICHAMAM
    Home:
    About Me:
    See my complete profile
    மென்பொருட்கள்
    தரவிறக்க!
    புதுவிசை


    தந்துகி-ஆதவன் தீட்சண்யா

    கேளிர்
    இலங்கையிலிருந்து

    கூட்டுமுகப்புக்கள்
    காலக் கூடை
    FEED/வாசகராகுங்கள்!!

    எங்கள் செய்தியோடையின் வாசகராகுங்கள்

    Add to Google Reader or Homepage

    Add to My AOL Add to Excite MIX

    NICHAMAM

    [Valid Atom 1.0]

    "Ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of human personality" (Dr. B.R. Ambedkar)