அமானுஸ்யங்களுடன் வாழ்தல்:பூதம் (பகுதி 6) "...முன்னே குளக்கோட்டன் மூட்டும் திருப்பணியைப் பின்னே இப்பூதம் முடிக்குமே..." எந்த வேலைகளுக்கும் கட்டுமானப்பணிகளுக்கும், ஏன் ஊரிலிருந்து இன்னோர் ஊரிற்குப் போவதற்குக்கூட அசுரபலம் தேவையாக இருக்கிறது, எல்லோருக்குமே. கண்ணுக்குத்தெரியாத எல்லாவற்றையும் இயங்கவிடாமல் அமுக்கிவைத்திருக்கும் அமுக்கப்பேயின் வீச்சுவலையின் எல்லைக்குள் எல்லாமுமே வந்துசேர்ந்துவிட்டிருந்தது.
குளக்கோட்டு மகாராசன் குளம் வெட்டத்தொடங்கி எண்ணிப்பார்க்கவே முடியாத மனித உழைப்பு மணி நேரங்களாலும் முடியாது போன கட்டுமானங்களைப் பூத கணங்களைக் கொண்டு முடித்து வந்தான் என நீங்கள் அறிவீர்கள் இல்லையா?
அதிலொரு பூதகணத்துடன் கரியப்பாவின் அமானுஸ்யத்திற்கு இப்போது தொடர்பிருப்பதாக கோளாவில் செய்கைக்காரர் மூலம் நிச்சயப்படுத்திக்கொண்டேன்.
நியமம் தவறாது பலி பராமரிப்பு போசகம் வேண்டித்திண்டாலும் கரியப்பாவின் இயக்கப்போக்கை என்னால் கட்டியாள இப்போது முடியாது இருக்கிறது.
மகா தர்மத்திலும் பேரூழிலும் பாழியிலும் கரியப்பாவினதும் எனதும் இடத்தை யார் அறீவார். கற்பனை கடந்த சோதி! கருணையே உருவமாகி! எனக் கைகூப்பி வணங்குவதைத்தவிர வேறேதும் மார்க்கம் அறிகிலேனே!
எனது கட்டுப்பாடிலும் ஆளுமையிலும் இருந்த வீடு இப்போது என்னிடமில்லை. நினைத்தே பார்க்கமுடியாத அமானுஸ்ய சக்திகளின் கட்டுப்பாட்டில் வீடு வந்தபின் போய்க் கோவிலில் இருப்பதே பாதுகாப்பானது உயிரோடு இருப்பதற்கான குறைந்த பட்ச உத்தரவாதமானது என எனது நிலை இப்போது மாறிவிட்டது.
திக்கற்றவருக்குத் தெய்வமே துணை!Labels: அமானுஷங்களுடன் வாழ்தல்
|
Post a Comment