அமானுஷங்களுடன் வாழ்தல்:அம்மன் பலிவேணும்! (பகுதி 7) கோயிலின் வாழ்க்கை முறை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது எனச்சொல்லிவிடமுடியாது. ஆறுதல். தொழுகை...தொழுகை .தொழுகை....
„..உற்றாரை யான் வேண்டேன் !ஊர் வேண்டேன்! பேர் வேண்டேன்! கற்றாரை யான் வேண்டேன் !...“ „…கற்ராவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!“
எனப்பாடுகிறார் அப்பர் சுவாமிகள். தாயின் மடியைத்தேடிக் கன்றுக்குட்டியானது அம்மா... எனக்கனிந்துருகி அழைப்பதைப்போல கடவுளைத் துதிக்கவேண்டுமெனச் சொல்கிறார். "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை..." எனச் சொன்ன கையோடு "கற்றாரை யான் வேண்டேன்..." எனவும் சொல்கிறார்.
கோயிலில் இருக்கும் காலத்தில் கந்தபுராண படனம் நிகழ்ந்துகொண்டிருந்தது. எனது அப்பா பண்டிதர் கனகசபை எழுதிய உரை அதி சிறப்பானது. அந்த உரையை கணநாதன் என்ற உரைகாரர் ஒருவர் அப்பாவிடம் முன்னர் கேட்டு வாங்கிப்போயிருந்தார். கணநாத படனகாரர் அப்பாவை( உரை- பொழிப்புரை) படிக்கவருமாறு எவ்வளவோ மன்றாடிக்கொண்டிருந்தார்.முதலும் கடைசியுமாகச் சங்கானையில் ஒரு கோயிலில்தான் எனது அப்பா பொழிப்புரை படித்தார். கடவுளைப் புகழ்ந்தேத்துவதற்கு எந்த விதமான தட்சணையும் பெறக்கூடாதென்பது என் அப்பாவின் முடிந்த முடிபு.
ஒரு புத்தகம் வைக்கிற அளவு சிறிய மேசை; மான் தோல் இருக்கை; அவ்வளவுதான் அப்பா என்ற கனகசபைப்பண்டிதர் விட்டுச்சென்ற அவர் சொத்து. ஆறுமுக நாவரின் கந்தபுராண உரைக்குச் சவால் விடக்கூடியது அப்பாவின் கந்தபுராண உரை.
இனி ஏலாது வீட்டை கொண்டுபோங்கோ என வைத்தியர்கள் கைவிரித்தபின் அப்பா மரணக்கட்டிலிலிருந்து கண் துஞ்சாது தெய்வாராதனை செய்து உயிர் நித்தார் என்பார் அக்கா! எனக்கு என்ன நடந்ததென யாரும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.
"தன்னை மறந்தாள்! தன் நாமம் கெட்டாள்! தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!" என எப்போதும் நான் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன். கோயிலிருந்து வீட்டுக்கு வந்து இருக்குமாறு ஊர் பேர் தெரியாதவர்களையெல்லாம் கோளாவில் செய்கைகாரர் இப்போது கூட்டி வந்திருந்தார்.அப்போது அவ்வாறான அசுரபலம் எனக்கு வந்ததோ தெரியவில்லை; அஞ்சுவது யாதொன்றூமில்லை, அஞ்ச வருவதுமில்லையென கோவிலை விட்டு வெளியே வந்தேன். பானுகோபன் யுத்தப்படனத்தை இனித்தொடங்கப் போகிறேன்...
கோளாவில் செய்கைக்காரருக்கு பூத கணங்களைக் கட்டியாள வலுவின்றி இருந்தபோது அவரிடம் நான் சொன்னேன்: "இதெல்லாம் அய்யா ,ஓரிரண்டுபேர் செய்யிற வேலையில்லை. பெரும் கூட்டும் பெரும் அவியல் படையலும் ஆளணி அம்புகளும் வேணும்... அம்மன் பலிவேணும்!"Labels: அமானுஷங்களுடன் வாழ்தல்
|
Post a Comment